திருநெல்வேலியில் பெண் இறப்பில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அவரது கணவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி அடுத்துள்ள மீனாட்சிபுரம், பாரதிநகரை சேர்ந்த முருகன் மகன் சுரேஷ் (33). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற முத்துமாரி (23) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு மகள் அஸ்வினி (4), மகன் ரிஷி கார்த்திகேயன் (2) உள்ளனர்.
இதில், சுரேஷ் மது குடித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்தாராம். இதுதொடர்பாக திங்கள்கிழமை கணவர்- மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில், பிரியதர்ஷினி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக, அவரது தாயார் தங்கத்துக்கு சுரேஷ் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தாராம். அங்கு வந்து பார்த்த தங்கம், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அறிந்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், மாநகர காவல் உதவி ஆணையர் மாரிமுத்து, காவல் ஆய்வாளர் உதயசூரியன் ஆகியோர் சுரேஷின் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். மேலும், விசாரணைக்காக அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
திருநெல்வேலி சந்திப்பு போலீஸார், பிரியதர்ஷினியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.