காரையாறு சொரிமுத்தய்யனார் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களிடம் பாபநாசம் சோதனைச் சாவடியில் வனத் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பாபநாசம் வனப் பகுதியில் உள்ள காரையாறு சொரிமுத்தய்யனார் கோயில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனப் பகுதியில் 3 முதல் 7 நாள்கள் வரைத் தங்கி விரதமிருந்து வழிபடுவதற்காக வரத் தொடங்கியுள்ளனர். ஆலங்குளம், சங்கரன்கோவில், தென்காசி, புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வாகனங்களில் வருகின்றனர்.
இந்நிலையில், பாபநாசம் முண்டன்துறை வனப் பகுதிக்குள் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள், மது உள்ளிட்டவை கொண்டுசெல்ல வனத் துறையினர் தடைவிதித்துள்ளனர். இதையடுத்து, பாபநாசம் சோதனைச் சாவடியில் வனச்சரகர் பரத் தலைமையில் வனத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோயில் மற்றும் அகஸ்தியர் அருவிக்குச் செல்லும் பயணிகள், பக்தர்களிடம் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
காரையாறு சொரிமுத்தய்யனார் கோயிலுக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களையோ, மதுபாட்டில்களையோ கொண்டு செல்ல அனுமதி இல்லை. மீறி கொண்டு சென்று பயன்படுத்தினால் தண்டிக்கப்படுவார்கள். மேலும், வனப் பகுதியில் எரிவாயு அடுப்பு பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு எந்த வகையிலும் இடையூறு செய்யக் கூடாது. வாகனங்களில் செல்பவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றனர்.