கடையம் அருகே பள்ளியை தரம் உயர்த்தக் கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கடையம் அருகே சொக்கநாதன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தக் கோரி, மாணவர்கள்

கடையம் அருகே சொக்கநாதன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தக் கோரி, மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொக்கநாதன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சொக்கநாதன்பட்டி, அழகம்மாள்புரம், பண்டாரகுளம், கட்டளையூர் ஆகிய கிராமங்களிலிருந்து 61 மாணவிகள் உள்பட 127 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், சொக்கநாதன்பட்டி கிராமத்திற்கு அருகிலுள்ள நாலாங்கட்டளையில் இயங்கி வந்த நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளதாம். இதையடுத்து, சொக்கநாதன்பட்டி கிராம மக்கள் தங்கள் பள்ளியையும் தரம் உயர்த்தக் கோரி செவ்வாய்க்கிழமை பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.
இதுகுறித்த தகவலறிந்த கடையம் காவல் ஆய்வாளர் பால்ராஜ், ஆலங்குளம் வட்டாட்சியர் சுப்புராயலு, கடையம் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஜான் பிரிட்டோ, மகேஷ்வரி, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பள்ளிக்குச் சென்று, அங்கு திரண்டிருந்த ச.ம.க. கடையம் ஒன்றியச் செயலர் பெரியசாமி, ஊர்த் தலைவர்கள் மாரிமுத்து, முத்தையா, சுப்பிரமணியன், கருத்தபாண்டி மற்றும் பெற்றோரிடம் பேச்சு நடத்தினர்.
அப்போது, நாலாங்கட்டளை பள்ளி நிர்வாகத்தினர் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி அரசிற்கு மனு கொடுத்ததோடு, இடம் மற்றும் பணமும் செலுத்தியுள்ளனர். அதுபோல் சொக்கநாதன்பட்டியிலும் பள்ளிக்கு இடம் வழங்குவதாக மனு அளித்து பணம் செலுத்தினால் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து பிற்பகலில் மாணவர்கள் வகுப்புக்குச் சென்றனர்.

நெல்லை அருகே மாணவர்கள் 2ஆவது நாளாக போராட்டம்
அரசுப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலி அருகே 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம்,  தேவர்குளம் அருகேயுள்ள கூவாச்சிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 200-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரு தலைமையாசிரியர், 8  ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்கள் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயில மானூர், திருநெல்வேலி போன்ற பிற ஊர்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. போதிய பேருந்து வசதி இல்லாததால் பிற பகுதிகளுக்குச் சென்று கல்வி பயில முடியாத சூழலில் இக்கிராம மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்பதற்காக கிராம மக்கள் அக்கிராமத்தில் 1 ஏக்கர் நிலம் அரசுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். மேலும் ரூ. 1 லட்சம் நிதியும் கிராம மக்கள் கல்வித் துறைக்கு செலுத்தினர். இருப்பினும் இப்பள்ளியை அரசு தரம் உயர்த்தவில்லை என புகார் கூறப்படுகிறது.
இப்பள்ளியை நிகழ் கல்வியாண்டு முதல் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, திங்கள்கிழமை கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்தனர்.
கிராம மக்களிடம் தென்காசி கல்வி மாவட்ட அலுவலர் சுடலைமணி, அதிகாரிகள் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த உடன்பாடும் எட்டவில்லை.
நிகழாண்டு முதல் இப்பள்ளியை தரம் உயர்த்தும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.  2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் புறக்கணித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com