களக்காட்டில் வீட்டுப் பயன்பாட்டுக் பொருள்கள் விற்பனைக் கடையில் திருடியதாக தம்பதி கைது செய்யப்பட்டனர்.
களக்காடு அருகேயுள்ள இடையன்குளத்தைச் சேர்ந்த தங்கசாமி மகன் ஜார்ஜ் (40). இவர் இங்குள்ள பழைய பேருந்து நிலையத்தில் வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் மற்றும் கவரிங் பொருள்கள் விற்பனைக் கடை நடத்தி வருகிறார். கடந்த 23, 24ஆம் தேதிகளில் கடையிலிருந்த வாட்ச், கவரிங் சங்கிலி உள்பட ரூ. 3,500 மதிப்புள்ள பொருள்கள் திருடுபோயினவாம். இதுதொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்வையிட்டபோது, கடைக்கு வந்த தம்பதி இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் களக்காடு உதவி ஆய்வாளர் துரைசிங்கம் விசாரணை நடத்தினார். விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த தம்பதி பாலசுப்பிரமணியன்(43) - கவிதா (35) எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்து, பொருள்களை மீட்டனர். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.