பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் செல்லிடப்பேசிகளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி இளைஞர் நலத்துறை, அர்ரஹ்மான் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு முதல்வர் மு. முஹம்மதுசாதிக் தலைமை வகித்தார். கருத்தரங்கில், அறக்கட்டளை தலைவரும், புற்றுநோய் நிபுணருமான டாக்டர் இப்ராஹீம் பேசியது: ஸ்மாட் போன் எனும் பொலிவுறு செல்லிடப்பேசிகளின் மிதமிஞ்சிய பயன்பாடு காரணமாக மாணவர்களின் வாழ்வு சீரழிகிறது. இணையதளங்களை பயன்படுத்தும்போது இலவச செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
நம் தனிப்பட்ட வாழ்க்கையில் ஸ்மார்ட் செல்லிடப்பேசிகள் அதிகமாக தலையிடுகின்றன. அச்செல்லிடப் பேசிகளின் தேடு பொறிகளில் தேவையில்லாதவற்றை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். வாழ்க்கை முறைக்கு மாறான விஷயங்களை இணைய தளங்களில் தேடுவதால் வாழ்வியல் பாதிக்கிறது. பல்வேறு பாதிப்பை சந்திக்க வேண்டியுள்ளது.
சமூக வலைத் தலங்களில் தங்களது புகைப்படங்களை பகிருவதை தவிர்க்க வேண்டும். மாணவிகளின் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, மாணவர்கள் இணையதள பயன்பாட்டை மிக கவனமாக கையாள வேண்டும். பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க வேண்டும் என்றார் அவர்.
கருத்தரங்கில், மாணவர்கள், பேராசிரியர்கள்குமார், நிஷா, ரோஸ்லின், அன்சாரி, பாதுஷா, ஷேக்சிந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்த்துறைத் தலைவர் ச. மகாதேவன் நன்றி கூறினார். இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் அ.மு. அயூப்கான் நன்றி கூறினார்.