அம்பாசமுத்திரம் அருகே சொத்து தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது பேரனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வாகைக்குளம் தெற்கு புதுமனைத் தெருவைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து (70). இவரது முதல் மனைவி சுப்பம்மாள். இரண்டாவது மனைவி நேசமணி. கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் அணைக்கரை முத்துவின், முதல் மனைவி சுப்பம்மாள் பிரிந்து சென்றார். இந்நிலையில், அவரது முதல் மனைவியின் மகன் பட்சிராஜன் தனது தந்தையிடம் சொத்துகளைப் பிரித்துத் தரும்படி கேட்டுள்ளார். இதற்கு நேசமணியின் குழந்தைகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதி பட்சிராஜனின் மகள் சுபத்ரா (23) சொத்துகளை பிரித்துத் தரும்படி அணைக்கரைமுத்துவிடம் கேட்டாராம். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதையடுத்து சுபத்ராவின் சகோதரர் அருண்குமார், அணைக்கரை முத்துவை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அணைக்கரை முத்து உயிரிழந்தார். இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து அருண்குமார்,பட்சிராஜன்,சுபத்ரா ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிளாட்ஸ்டன் பிளசட் தாகூர் குற்றம் சாட்டப்பட்ட அருண்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். பட்சிராஜன், சுபத்ரா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.