திருநெல்வேலி நகரத்தில் உள்ள தனியார் மொத்த விற்பனை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு பொருள்கள் எரிந்து சேதமாகின.
திருநெல்வேலி நகரம், கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான பொருள் சேமிப்பு கிடங்கு இதே பகுதியில் உள்ளது. கம்ப்யூட்டர் சாம்பிராணி, பினாயில், பூஜை பொருள்கள் என பல்வேறு வகையான வீட்டு உயோகப் பொருள்களை மொத்தமாக விற்பனை செய்யும் வியாபாரியான இவர், கிடங்கில் ஏராளமான பொருள்களை இருப்பு வைத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதி கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். திங்கள்கிழமை இரவு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் கொழுந்துவிட்டு எரிந்தன. தகவலறிந்து பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். எனினும், கிடங்கில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீவிபத்து குறித்து தீயணைப்பு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.