திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டையில் தண்ணீர் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியின் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவர்-மாணவிகள் சார்பில் உலக தண்ணீர் தினத்தையொட்டி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியைக் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். என்.சி.சி. அலுவலர் கேப்டன் குமரேசன் தலைமையில் மாணவர்-மாணவிகள் பேரணியாகச் சென்றனர். தண்ணீர்ச்சிக்கனம், மரம்வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு முழக்கங்களை மாணவர்கள் எழுப்பினர். கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி காவல்நிலைய சாலை, வீரபாகுநகர், தொழிற்பயிற்சிக் கல்லூரி வழியாக மீண்டும் கல்லூரியை அடைந்தது. சுபேதார் முருகன் நன்றி கூறினார்.