தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை (மார்ச் 23) தொடங்குகிறது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை (மார்ச் 23) தொடங்குகிறது. தினமும் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை பயிற்சி நடைபெறும். ஆங்கிலம், கணிதம், தமிழ் உள்ளிட்ட பாடங்களுக்கு தகுதியானவர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப் பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பப் படிவ நகல், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.