திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மதுரையைச் சேர்ந்த இளைஞர் சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்தாரா அல்லது விபத்தில் உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் இளைஞர் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர், மதுரை கூடல்நகர் பகுதியைச் சேர்ந்த மன்னார்சாமி மகன் நாகஅரவிந்த் (26) என்பது தெரியவந்தது. மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நாகஅரவிந்தும், தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த மீனாட்சியும் காதல் திருமணம் செய்தனராம். ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ள மீனாட்சியைப் பார்க்க வாரந்தோறும் நாகஅரவிந்த் வருவாராம். அப்படி வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா அல்லது விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.