டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரவையின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலர் கு.கி.கலைக்கண்ணன் தலைமையில், அந்த அமைப்பினர் கொள்ளிப் பானையில் மனுவுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரி முழக்கமிட்ட அவர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு:
திருநெல்வேலி மாநகரில் மகாராஜநகர் உழவர்சந்தை அருகேயும், பேட்டையில் மக்கள் குடியிருப்பு அதிகம் உள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியிலும், நகரத்தில் மாடத்தெரு பகுதியிலும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவற்றை இடமாற்றம் செய்யக் கோரி ஏற்கெனவே மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. பெண்கள், முதியவர்களை பாதிக்கும் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.