அடிப்படை வசதிகள் செய்துதர மறுப்பதைக் கண்டித்தும், சிறுவர் பூங்கா அமைக்கக் கோரியும் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் விடுதலைக் களம் அமைப்பைச் சேர்ந்த 52 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாநகராட்சியின் 39ஆவது வார்டுக்குள்பட்ட லட்சுமிபுரத்தில் சுகாதார வளாகங்களை முறையாகப் பராமரிக்காததால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, சுகாதார வளங்களைச் சீர்படுத்தவும், திறந்தவெளி சாக்கடைகளை சுத்தம் செய்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளவும் தமிழர் விடுதலைக் களத்தினர் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
மேலும், புதிய கழிவுநீர் ஓடைகள் கட்டித்தரவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாது,19ஆவது வார்டுக்குள்பட்ட ராஜகோபாலபுரம் நடுத்தெருவில் சாலை வசதி சிறுவர் பூங்கா ஏற்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் மாநகாரட்சி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழர் விடுதலைக் களம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, திருநெல்வேலி மாநராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு மாவட்டச் செயலர் வே.ச. முத்துக்குமார் தலைமை வகித்தார். மாநகர ஒருங்கிணைப்பாளர் மணிபாண்டியன், மாநகர இளைஞரணிச் செயலர் ஜெய்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பெண்கள் பலரும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக 24 பெண்கள் உள்பட 52 பேரை போலீஸார் கைது செய்தனர்.