தென்காசியில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மூன்று பேரை தனிப்படை போலீஸார் கைதுசெய்தனர்.
தென்காசி ரயில்வே நகர் குடியிருப்பில் வசித்து வருபவர் மாடசாமி மனைவி சுடலைமாரி (50). இவர் ரயில்வேயில் கேங் மேனாக வேலைபார்த்து வருகிறார். இவருடைய தாய் லட்சுமி (70). இவர் தன்னுடைய மகளுடன் வசித்து வந்தார்.
கடந்த 9ஆம் தேதி காலை சுடலைமாரி வேலைக்கு சென்றுவிட்டார். பகல் 12.30மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவுகள் அனைத்தும் வழக்கம்போல் திறந்துகிடந்துள்ளது. வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது, லட்சுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் தென்காசி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் இக்கொலை வழக்கு தொடர்பாக ஓட்டப்பிடாரம் அருகே இளவலங்கல் தெற்குத் தெருவைச் சேர்ந்த க. தமிழரசன் (26), திருநெல்வேலி வையாபுரி நகர் பகுதியைச் சேர்ந்த தி. செல்வம் என்ற செல்வரத்தினம்(27), வள்ளியூர் ராதாபுரம் சாலையைச் சேர்ந்த ம. அய்யப்பன் (26)ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 13கிராம் தங்கநகை மற்றும் ரூ.20ஆயிரத்தை போலீஸார் மீட்டனர்.