எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி மாணவர் ரிபான் டேனியல், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவி சுப்புலட்சுமி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 12) திருநெல்வேலியில் நடைபெறுகிறது. இதையொட்டி, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான மினி மாரத்தான் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் கே.ஆர்.பி. பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில், சுரண்டை அரசு கலைக் கல்லூரி, பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மாணவர்கள் பிரிவில், செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வியியல் மாணவர்கள் ரிபான் டேனியர், பசுபதி ஆகியோர் முதல் 2 இடங்களைப் பிடித்தனர். மதிதா இந்துக் கல்லூரி மாணவர் மணிகண்டன் 3-ஆவது இடத்தைப் பிடித்தார். மாணவிகள் பிரிவில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவி சுப்புலட்சுமி முதலிடத்தைப் பிடித்தார். ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி மாணவி கலைவாணி 2-ஆவது இடமும், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவி சோபியா 3-ஆவது இடமும் பிடித்தனர்.
மாரத்தான் போட்டியின் தொடக்க விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் சரளா தேம்பாவனி, உதவி இயக்குநர் மயிலம்மாள், மாவட்ட விளையாட்டு அலுவலர் வீரபத்ரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.