திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக காலமுறைப் பணியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பலன்கள் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 16 அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் 2007இல் தேர்வுக்குழுவால்
காலமுறைப் பணியாளர்கள் 55 பேர் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டுவந்தன.
இந்நிலையில், 2012இல் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது. அதன் பிறகு, இவர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், வருடாந்திர ஊதிய உயர்வு, பண்டிகைக் கால முன்பணம் போன்ற பணப்பலன்கள் நிறுத்தப்பட்டன.
இவர்கள், 5, 6ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி அனைத்து சலுகைகளும் பெற்றுவந்தனர். 2015இல் அரசு வெளியிட்ட அரசாணை எண் 452இல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி காலமுறைப் பணியாளர்கள் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், 7ஆவது ஊதியக்குழு பரிந்துரை பணப்பலன்கள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என, இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நவ. 6இல் இப்பல்கலைக்கழகப் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 192 நிரந்தரப் பணியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை பலன்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காலமுறைப் பணியாளர்கள் 55 பேர் சேர்க்கப்படவில்லை. இதனால், மூன்று மாவட்டங்களில் பணியாற்றிவரும் 55 காலமுறைப் பணியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பலன்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரம் கருதி, அரசு வழங்கும் அனைத்துச் சலுகைகள், ஏழாவது ஊதியக்குழு பணப் பலன்களை தங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.