திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில் முகவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அஞ்சல் துறையில் விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல் மற்றும் பார்சல்களை சேகரித்து பதிவு செய்யவும், அஞ்சல்களை பட்டுவாடா செய்யவும் அயல்பணி (அவுட்சோர்சிங்) அஞ்சல் முகவர் பணி நியமிக்கப்பட உள்ளது. கையாளும் அஞ்சல்களின் எண்ணிக்கை மற்றும் எடைக்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அதன்படி திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில் இப்பணிக்கு திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் அஞ்சல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில் பணியாற்றினால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. உள்ளூரில் வசிப்பவர்களுக்கும், சொந்தமாக இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். வாகனம் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 18 முதல் 40 வயதுக்குள்பட்டோர் தகுதியிருப்பின் விண்ணப்பிக்கலாம்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து விரைவு தபால் மூலமாக THE SENIOR SUPERINTENDENT OF POST OFFICES, TIRUNELVELI DIVISION, TIRUNELVELI-627002 என்ற முகவரிக்கு இம்மாதம் 28 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் உறையின் மேல் APPLICATION FOR THE POST OF OUT SOURCED POSTAL AGENT என எழுதியிருத்தல் வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது. காரணம் குறிப்பிடாமல் ஒன்றையோ அல்லது அனைத்து விண்ணப்பங்களையோ நிராகரிக்கும் அதிகாரம் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளருக்கு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.