தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரில் 15 நாள்களுக்கு இரவு நேரக் கடைகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என, மாநகரக் காவல் துறை ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், அதன் தலைவர் குணசேகரன், திருநெல்வேலி ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் சோனா வெங்கடாசலம், பேரமைப்பின் இணைச் செயலர் நயன்சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் மாநகரக் காவல் துறை ஆணையரிடம் அளித்த மனு:
சாதி, மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இம்மாதம் 18ஆம் தேதி வருகிறது.
பண்டிகைக்கு மக்கள் பொருள்களை வாங்குவதற்கு உதவியாக அக். 3முதல் 16ஆம் தேதி வரை நள்ளிரவு 2 மணி வரையும், தீபாவளி பண்டிகைக்கு முன்தினமான அக். 17ஆம் தேதி இரவு முழுவதும் வியாபாரம் செய்ய அனுமதியளிக்க வேண்டும்.
மேலும், இரவு நேர வியாபாரத்துக்கு காவல் துறை மூலம் உரிய பாதுகாப்பு ஏற்பாடு அளிக்க வேண்டும். கடந்தாண்டு அனுமதியளித்து ஒத்துழைப்பு வழங்கியதைப்போல இந்தாண்டும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர் அவர்கள்.