பழவூர் அருகே புதன்கிழமை மாலை சுமை ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த பள்ளி மாணவர் உயிரிழந்தார் .
பழவூர் அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்த குருதவசு மகன் வெங்கடேஷ்(14). இவர் ஆவரைகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை மாலை பள்ளி முடிந்த பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக பள்ளிக்கு முன்னர் காத்து நின்ற போது அந்த வழியாக வந்த சுமை ஆட்டோவில் வெங்கடேசும் மேலும் சில மாணவர்களும் ஏறிச்சென்றனராம். இந்த ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழுந்து சாலையில் கவிழ்ந்ததாம். இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மாணவர் வெங்கடேஷ் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு வெங்கடேஷ் இறந்தார். அவருடன் பயணித்த பிற மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாம். இது குறித்து பழவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.