திருநெல்வேலியில் நவம்பர் 13ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் நவம்பர் 13ஆம் தேதி இந்த விழா நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி பேசியது:
திருநெல்வேலியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுவதற்காக பாளையங்கோட்டை பெல் மைதானம் பார்வையிடப்பட்டுள்ளது. இந்த விழாவில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களுக்கு அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்.
விழாவுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பயனாளிகள் வருகை தருவர் என்பதால் அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பு வசதிகளையும் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து, விழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எம்.பி.க்கள் கே.ஆர்.பி. பிரபாகரன், வசந்தி முருகேசன், எம்எல்ஏ.க்கள் முருகையாபாண்டியன், செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார், மாநகர காவல் துறை துணை ஆணையர் சுகுண சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.