திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி, குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் இடைத்தரகர்கள் மூலம் அதிகாரிகள் பணம் பெறுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அனைத்து அலுவலகங்களிலும் திடீர் சோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் துணை கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அங்குள்ள ஆவணங்கள், வசூலாகியுள்ள தொகை ஆகியவற்றை கணக்கிட்டுச் சோதனை செய்தனர். பொதுமக்களிடம் இடைத்தரகர்கள் தலையீடு உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ஆவணங்களில் உள்ள வேறுபாடுகள் குறித்து தொடர்ந்து கணக்கிடப்படுகிறது.
இரவு வரை எந்தத் தொகையும் பறிமுதல் செய்யப்படவோ, கைது நடவடிக்கைகளோ இல்லை. விசாரணையில் தெரியவந்துள்ள விஷயங்கள் குறித்து அறிக்கை சமர்பிக்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.