அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு இடையே நடத்தப்பட்ட வழக்குவாத மன்றப் போட்டியில், திருநெல்வேலி சட்டக் கல்லூரி முதலிடம் பிடித்தது.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு இடையே "மூட் கோர்ட்' எனப்படும் வழக்குவாத மன்றப் போட்டிகள், சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றன.
இதில், 20-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரிகள் பங்கேற்றன. திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி சார்பில் ராதா செல்வகணேஷ், நித்யா ஆன்சன், நித்யா அருணாலட்சுமி ஆகியோர் இந்தப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசுக்கான கோப்பையும், ரொக்கப் பரிசும் பெற்றனர். மாணவர்களில் சிறப்புப் பேச்சாளராக ராதா செல்வகணேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
இதேபோல, இந்திய அளவில் அனைத்து மாநில சட்டப் பல்கலைக் கழக மற்றும் சட்டக் கல்லூரிகள் பங்கேற்ற வழக்குவாத மன்றப் போட்டிகள், புதுச்சேரியில் நடைபெற்றன. இதில், 42 கல்லூரிகள் பங்கேற்றன. இதில், பஞ்சாப் சட்டக் கல்லூரி முதலிடம் பிடித்து. திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி மாணவிகள் பாண்டிதுரைச்சி, சவித்ரா, பிரீத்திராணி ஆகியோர் கொண்ட குழுவினர் 10ஆவது இடம் பிடித்தனர்.
திருநெல்வேலி சட்டக் கல்லூரிக்கு மாநில அளவிலும், தேசிய அளவிலும் பெருமை தேடித் தந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா, கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் எஸ்.எம். பாலகிருஷ்ணன், வழக்குவாத மன்றங்களுக்கான பொறுப்பாசிரியர் லட்சுமி விஸ்வநாத், பேராசிரியர் சுரேஷ் மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர், மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.