பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்கும் சலுகைத் திட்டங்களை வாடிக்கையாளர்கள் பெறும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அலுவலகங்களில் வியாழக்கிழமை (அக். 12) மெகா மேளா நடைபெறுகிறது.
பி.எஸ்.என்.எல். திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்டப் பொதுமேலாளர் ப. முருகானந்தம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பி.எஸ்.என்.எல். நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு 90 நாள்களுக்கு அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அளவற்ற இலவச கால் வசதியுடன் தினமும் 1 ஜி.பி. 3 ஜி டேட்டாவை பிளான் 429 மூலம் அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய வாடிக்கையாளர்கள் விரும்பினால் இந்த பிளானுக்கு மாறலாம். மேலும் இந்த
பிளானை குறுந்தகவல் மூலம் ஆக்டிவேட் செய்ய PLAN BSNL429 என்று டைப் செய்து 123 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினால், ரூ. 364.84 மட்டும் வசூலிக்கப்படும். செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 160- க்கு ரீசார்ஜ் செய்தால் இம்மாதம் 15 ஆம் தேதி வரை முழு டாக்டைம் வழங்கப்படுகிறது. தரைவழி இணைப்பில் பிளான் 349 என்ற புதிய பிளான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிளானில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து நெட்வொர்க்கு களுக்கும் 24 மணி நேரமும் இலவசமாக பேசி மகிழலாம். புதிய தரை வழி மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு அமைப்புக் கட்டணம் எதுவும் கிடையாது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக இம்மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், தென்காசி, வள்ளியூர், பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை தொலைபேசி நிலையம் மற்றும் வண்ணார்பேட்டையிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையங்கள் விடுமுறை நாள்களிலும் செயல்படும்.
மேலும் இச் சலுகைகளை பொதுமக்கள் பெறும் வகையில் வியாழக்கிழமை (அக். 12) தமிழகம் முழுவதும் மெகா மேளா நடைபெறுகிறது. இம்மாவட்டத்திலுள்ள அனைத்து தொலைபேசி நிலையங்களிலும் இந்த மேளா நடைபெறும்.
இந்த சிறப்பு மேளாவில், 3 ஜி சிம்கள், எம்.என்.பி. இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறோம். தங்களது செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்களையும் இணைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.