பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அம்பாசமுத்திரத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டார தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டாரத் தலைவர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். எஸ். சமுத்திரம், எஸ். சட்டநாதன், எஸ். பலவேசம், காசிவிஸ்வநாதன், முருகன், வள்ளி, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ஆர். கசமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் எம். ராமகிருஷ்ணன், பரமசிவன், மாடசாமி, மைதீன் பிச்சை, தர்மலிலிங்கம், இ.சொக்கலிங்கம், சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பேசினர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இழப்பீடு தொகை ரூ.1,40,70,800-ஐ உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வி.வடிவேல் நன்றி கூறினார்.