திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே முதியவரைக் கட்டிப்போட்டு அரசுப் பள்ளி ஆசிரியையை அரிவாளால் வெட்டிவிட்டு 12 பவுன் நகையைப் பறித்து சென்ற 3 பேர் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
தச்சநல்லூர் கரையிருப்பு அடுத்த வினோத்ராம் நகரைச் சேர்ந்தவர் அருணாசலம் (67). இவரது மனைவி சகுந்தலா. இவர்களது மகள் தேவி (32), கயத்தாறு அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். வியாழக்கிழமை இரவு வீட்டில் மூன்று பேரும் இருந்தனராம். அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் அருணாசலத்தைக் கட்டிப் போட்டதோடு, சகுந்தலாவை தாக்கி கீழே தள்ளினராம்.
பின்னர் அந்தக் கும்பல் தேவியின் கையில் அரிவாளால் வெட்டியதோடு, அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, சகுந்தலாவின் 3 பவுன் கம்மல், பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனராம். திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.