பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் வடக்குப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 7 கார்களின் கண்ணாடிகளை கட்டையால் அடித்து சேதப்படுத்தியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கே.டி.சி. நகர் வடக்குப் பகுதியில் ஆசிரியர் காலனி, மீனாட்சி சுந்தரர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள், உள்விளையாட்டரங்கம் ஆகியவை உள்ளன.
இங்கு வியாழக்கிழமை மாலையில் வந்த மர்மநபர் தனது கையில் வைத்திருந்த கட்டையால் சாலையோரமும், வீடுகள் அருகேயும் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடியைச் சேதப்படுத்தினார். இதனால் அச்சமடைந்த பெண்கள் அங்கிருந்து ஓடினர்.
7 கார்களைச் சேதப்படுத்திய அந்த நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸார் விசாரணையில் அவர், நான்குனேரி அருகேயுள்ள மீனவன்குளத்தைச் சேர்ந்த செல்லப்பா மகன் ஜெயசீலன் (35) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.டி.சி. நகர் வடக்குப் பகுதியில் திருட்டு அச்சம் அதிகளவில் உள்ளதால், மாலை மற்றும் இரவு நேரங்களில் போலீஸார் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும். சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். தெருவிளக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.