திருநெல்வேலி மேலப்பாளையத்தில் 18 வயது பூர்த்தி ஆகாத மாணவிக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவி அப்பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 பயின்று வருகிறார். 18 வயது பூர்த்தியாகாத இந்த மாணவிக்கும், அதே பகுதியை சேர்ந்த தனியார் ஜவுளிக் கடையில் பணி செய்து வரும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை மேலப்பாளையத்திலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் இந்த திருமணம் நடைபெற இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தேவ்ஆனந்த், காவல் ஆய்வாளர் ரகுபதிராஜா மற்றும் அதிகாரிகள் திருமணம் நடைபெற இருந்த மண்டபத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி ஆக இன்னும் 6 மாதம் உள்ளது எனத் தெரியவந்தது. இதையடுத்து, இரு தரப்பினரிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். திருமணம் நிறுத்தப்பட்டது. பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்ததும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
இருவருக்கும் 6 மாதத்துக்கு பிறகு திருமணம் முடிப்பது என்றும், அதற்காக நிச்சயதார்த்த நிகழ்ச்சியாக நடத்துவதாகவும் உறவினர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.