ஏழு செவ்வியல் மொழிகளில் தமிழ் பல்வேறு வளங்களைக் கொண்டது என்பது பெருமைக்குரியது என எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் தெரிவித்தார்.
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த் துறை (அரசு உதவிபெறா பாடப்பிரிவு) சார்பில், மாநில அளவிலான மொழித் துறை மேம்பாட்டுப் பயிலரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி இஸ்லாமிய இயல் துறை உதவிப் பேராசிரியர் மு. அப்பாஸ் அலி கிராஅத் ஓதினார். கல்லூரி முதல்வர் மு. முஹம்மது சாதிக் தலைமை வகித்தார். பயிலரங்கத்தை தொடங்கி வைத்து இரா. நாறும்பூநாதன் பேசியதாவது:
உலகில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவம் கிடையாது. தமிழ் மொழி தொன்மையானது மட்டுமல்ல, ஏழு செவ்வியல் மொழிகளில் ஒன்று. அதாவது, கிரேக்கம், லத்தீன், பாரசீகம், அரபு, சம்ஸ்கிருதம், ஹீப்ரு வரிசையில் தமிழ் மொழியும் ஒன்றாகும். பல்வேறு வளங்களைக் கொண்டது. பல கோடி மக்கள் தினமும் பேசுகின்ற மொழி என்பது பெருமைக்குரியது.
சங்க இலக்கியங்களில் வாழ்வியல் இலக்கணம் உள்ளது. தமிழ் இலக்கியத்தை கற்பதன் மூலம் மொழியின் வளம், பெருமையை உணர முடியும். மாணவர்கள் கல்விப் பருவத்தில் தாய் மொழி தமிழை நேசிப்பதோடு இல்லாமல், மொழியின் வளங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பயிலரங்கில், கல்லூரி அரசு உதவிபெறா பாடப்பிரிவு இயக்குநர் அ. அப்துல் காதர் பேசியதாவது: தமிழ் மொழி குறித்து நம்மிடையே சுயமதிப்பீடு குறைவாக உள்ளது. தாய் மொழியை கற்பதன் மூலம் பிற மொழிகளில் சிறந்து விளங்க முடியும் என்பதை உணர வேண்டும். ஆளுமை பண்பை வளர்த்துக் கொள்வதன் மூலம் மொழியின் வளத்தை அறிய முடியும். தாய் மொழியை நேசிக்க வேண்டும், ரசிக்க வேண்டும் என்றார் அவர்.
பயிலரங்கின் முதல் அமர்வில், கவிதை மொழி எனும் தலைப்பில் மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் ஷப்ரின் முனிர், 2 ஆவது அமர்வில், மொழி வளர்ச்சியில் மொழியியலின் பங்கு எனும் தலைப்பில், அண்ணாமலைப் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் பா. குமரேசன், 3 ஆவது அமர்வில், மொழித்திறன் மேம்பாடும், பயன்பாட்டு தமிழும் எனும் தலைப்பில் விருதுநகர் வி.எச்.என். செந்திக்குமார நாடார் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் க. ஸ்ரீதர் ஆகியோர் பேசினர்.
பயிலரங்கில், கல்லூரி தமிழ்த் துறை (அரசு உதவிபெறா பாடப்பிரிவு) தலைவர் இரா. அனுசூயா, வணிகவியல் துறைத் தலைவர் கமாலுதீன், பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரி கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் முஹம்மது நவா உசேன் மற்றும் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.
மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக தமிழ்த் துறைத் தலைவர் அ. ராமசாமி மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கினார். உதவிப் பேராசிரியை மு.ரா. மஜிதா பர்வின் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் மு. சாதிக் அலி நன்றி கூறினார்.