ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டம் வெள்ளிக்கிழமை நூதன போராட்டத்துடன் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 15 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் பூட்டுப் போடும் போராட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகத்தில் தங்கி, சமைத்து சாப்பிட்டு காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.
வெள்ளிக்கிழமை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தை தொடர்ந்தனர். இதன் ஒரு பகுதியாக அரசு அலுவலர்கள் வெட்டுக் காயங்களுடன், ரத்தம் வெளியேறி கீழே கிடப்பது போன்றும், அவர்களை மத்திய, மாநில அரசுகள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டுவதைப் போன்று சித்திரித்து இருந்தனர். பெண்கள் இந்த காட்சியை கண்டு ஒப்பாரி வைத்து அழுதனர். இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவை ஏற்று பிற்பகலுக்கு மேல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.