பாளையங்கோட்டையில் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சுபாஷ் பண்ணையார் அக்டோபர் 13ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென திருநெல்வேலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் புல்லாவெளியைச் சேர்ந்தவர் சிங்காரம் (47). பல வழக்குகளில் தொடர்புடையை இவரை, தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து வாகனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றனர். கே.டி.சி.,நகர் அருகே சென்றபோது சிலர் போலீஸ் வாகனத்தை வழிமறித்து அவரை வெட்டிக் கொலை செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரா, அக்டோபர் மாதம் 13ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்ததோடு, அன்றைய தினம் சுபாஷ் பண்ணையார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.