ஆசிய நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற திருநெல்வேலி விளையாட்டு விடுதி வீரருக்கு சனிக்கிழமை திருநெல்வேலியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
உஸ்பெகிஸ்தான், தாஷ்கன்ட் நகரில் 16 வயதுக்குள்பட்டோருக்கான 9 ஆவது ஆசிய நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில், திருநெல்வேலி அரசு விளையாட்டு விடுதி நீச்சல் வீரர் விவேகானந்த் லெனார்டு கலந்துகொண்டார். இவர் 100- க்கு 4 ப்ரீ ஸ்டைல் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
தங்கம் வென்று சனிக்கிழமை திருநெல்வேலிக்கு திரும்பிய வீரர் விவேகானந்த் லெனார்டுக்கு சந்திப்பு ரயில் நிலையத்தில் நீச்சல் கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மாநிலப் பொருளாளர் திருமாறன் தலைமை வகித்தார். நீச்சல் கழக மாவட்டச் செயலர் லட்சுமணன், நீச்சல் பயிற்றுநர் கருணாகரன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் வெங்க டேஷ், சத்யகுமார், விக்னேஷ், மணிமாறன், அமல நாதன் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.