அம்பாசமுத்திரத்தில் நகராட்சி மற்றும் தனியாருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் மூடப்பட்ட சந்தை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சனிக்கிழமை அளவீடு செய்யப்பட்டது.
அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதியில் பாபநாசம் சாலையில் வண்டிமறித்தம்மன் கோயில் அருகே தனியார் நிர்வகித்து வந்த சந்தை ஜூன் 5ஆம் தேதி நகராட்சிக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாக கூறி நகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் மூடப்பட்டது.
இதையடுத்து தனியார் உரிமையாளர் கல்யாணி வெங்கட்ராமன் இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தார். இந்நிலையில் ஆக. 5ஆம் தேதி அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையர் சந்தை நடத்த வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கியதாகக் கூறி, சந்தை வியாபாரிகள் மீண்டும் சந்தையில் வியாபாரத்தைத் தொடங்கினர்.
இதுகுறித்து கல்யாணி வெங்கட்ராமன் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தெரிவித்ததையடுத்து உயர் நீதிமன்றம் ஆக. 22ஆம் தேதி சந்தையை சீல் வைத்து அடைக்க உத்தரவிட்டதன்பேரில் அம்பாசமுத்திரம் நகராட்சி நிர்வாகம் ஆக. 23இல் சந்தையை மூடி சீல் வைத்தது.
மேலும் உயர்நீதிமன்றத்தில் தனியார் இடத்தின் உரிமையாளர் கல்யாணி வெங்கட்ராமன் சந்தைப் பகுதியை அளவீடு செய்து நகராட்சிக்குச் சொந்தமான இடத்தையும், தனது இடத்தையும் இனம் கண்டறிய உத்தரவிடக் கோரினார். அதற்கு நீதிமன்றம் ஒப்புக்கொண்டதையடுத்து, சனிக்கிழமை சந்தைப் பகுதியை வட்டாட்சியர் வெங்கட்ராமன் தலைமையில் நகராட்சி ஆணையாளர் முருகேசன், தனியார் உரிமையாளர் கல்யாணி வெங்கட்ராமன் முன்னிலையில் தலைமை நிலஅளவையர் ஸ்டீபன், நில அளவையர் தனலெட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்தனர்.
இந்த அளவீடு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின் படி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.