திருநெல்வேலியில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வண்ணார்பேட்டையில் தொழிலாளர் முன்னேற்றச் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, தொமுச பொதுச்செயலர் அ. தர்மன் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டச் செயலர் ஆர். மோகன், ஏஐடியூசி மாவட்டச் செயலர் சடையப்பன், எச்.எம்.எஸ். தொழிற்சங்க மாவட்டச் செயலர் சுப்பிரமணியன், ஏஐசிசிடியூ தொழிற்சங்க மாவட்டச் செயலர் கணேசன் மற்றும் அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்: தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற சட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் நவம்பர் 9, 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள மக்களவை முற்றுகைப் போராட்டத்தில் திருநெல்வேலியில் இருந்து 500 பேர் கலந்து கொள்வது, அக். 3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பாளையங்கோட்டையில் கருத்தரங்கு நடத்துவது.
அக். 4 முதல் 10 ஆம் தேதி வரை திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசார இயக்கம் நடத்துவது. நவ. 2 ஆம் தேதி பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.