திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டாரப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள திராட்சையில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கடையநல்லூர் திராட்சைக்கு என்று தனி மவுசு உண்டு. இங்குள்ள திராட்சைகள் மிகவும் திரட்சியாக இருக்கும் என்பதால் வெளிமாநிலங்களுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், திராட்சையை சேமித்து வைக்க சேமிப்பு கிடங்கு வசதி இல்லாதது, தண்ணீர் பற்றாக்குறை, போதிய விலை விவசாயிகளுக்கு கிடைக்காதது போன்ற காரணங்களால் திராட்சை சாகுபடியின் அளவு பல நூறு ஏக்கரிலிருந்து படிப்படியாக குறைந்து தற்போது வெறும் 25 ஏக்கர் பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிலும், 10 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் பயிர் செய்யப்பட்டுள்ள திராட்சையில் தற்போது கருப்பட்டி நோய் தாக்கியுள்ளதாகவும், அதனால் திராட்சை பழங்கள் உதிர்ந்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். எனவே, வேளாண்துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.