திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பாசிரியர் பணி நியமனத்துக்கான எழுத்துத் தேர்வை 3,817 பேர் எழுதினர்.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாகவுள்ள ஓவியம், இசை, உடல்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களைப் பூர்த்தி செய்திடும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் சனிக்கிழமை போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்தத் தேர்வுக்கு 4,039 பேர் விண்ணப்பித்திருந்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து விண்ணப்பித்தவர்களுக்காக திருநல்வேலி, பாளையங்கோட்டையில் 10 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில், சனிக்கிழமை 3,817 பேர் வருகை தந்து தேர்வை எழுதினர். 222 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க முதன்மைக் கல்வி அலுவலர் தனமணி தலைமையில் ஒரு குழு, மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையில் 5 குழு, பறக்கும்படை என 7 குழுக்கள் தேர்வு மையங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.