திருநெல்வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை கோயில் விழாவுக்கு வந்த யானை தாக்கியதில் பெண் இறந்தார்.
பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி சுடலைமாடசாமி கோயிலில் சித்திரை விஷு திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வர். இந்த விழாவையொட்டி மதுரை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமரேசன் என்ற மாடசாமியின் மனைவி பத்ரகாளி (42) உள்ளிட்ட சிலர், இக்கோயில் பகுதியில் தற்காலிக கடை அமைத்து பூ வியாபாரம் செய்தனராம்.
கோயிலில் தங்கியிருந்த பத்ரகாளி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக ஒதுக்குப்புறமான இடத்திற்கு சென்றாராம். அங்கு மரத்தடியில் யானை கட்டிவைக்கப்பட்டிருந்ததைக் கவனிக்காத அவர், அதன் மீது மோதியதாக கூறப்படுகிறது. அப்போது, யானை தூக்கி வீசியதில் பத்ரகாளிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். வனத்துறை அலுவலர் சரவணக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.