திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான சேவையாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சி திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவர் ஜெ. பிரபாகர் தலைமை வகித்தார். அமைப்பின் நிறுவனர் டாக்டர் அழகர் ராமானுஜம் தொடங்கி வைத்தார். பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மத்திய சிறைக் கண்காணிப்பாளர் கோ.பா. செந்தாமரைக்கண்ணன், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக டீன் ஜி. சக்திநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சேவைகள் மூலம் பல்வேறு சாதனைகள் செய்தவர்களுக்கு விருது, பார்வையற்றோர் உதவி, பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடை போன்றவை வழங்கப்பட்டன.
மருத்துவ சேவை செயலி அறிமுகம் குறித்த விளக்கவுரை, யோகா, மரம் வளர்த்தல், நீர் மேலாண்மை, கல்வி, தொண்டு நிறுவனங்களின் நிதி பெறும் வழிமுறைகள், குழு கலந்துரையாடல் உள்ளிட்டவை நடைபெற்றன.
முன்னதாக, பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன. சோயா தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் சரவணன், டாக்டர் பரமசிவம் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.