முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு இணையதளம் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குநர் ந. முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் படைவீரர்களின் சிறார்கள், ராணுவத்தில் அலுவலராக பணி நியமனம் பெறும் வகையில் சிடிஎஸ், ஏஎப்சிஏடி ஆகிய தேர்வுகளுக்கான பயிற்சி இணையதளம் மூலம் அளிக்கப்பட உள்ளது. இத்தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களுக்கான இணைப்பு தரப்படும். இதன்மூலம் முன்னாள் படை வீரர்கள் சிறார்கள், அவரவர் இருப்பிடத்திலிருந்து www.exweletutor.com என்ற இணையதளத்தின் மூலம் பயிற்சி பெறலாம்.
மாணவர்களுக்கு ஒவ்வொரு வார இறுதியிலும் பொது அறிவு, ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் மாதிரித் தேர்வு நடத்தப்படும். இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்னாள் படைவீரர்களின் தகுதியுடையை சிறார்களுக்கு தனியாக இணையதள முகவரி, அதற்கான ரகசிய எண்களும் அளிக்கப்பட்டு அவர்களின் பயிற்சி வகுப்புகளின் முன்னேற்றம், தகுதி படைத்த கல்வியாளர்களால் கூர்மையாக கண்காணித்து தேவையான வழிகாட்டுதல், விளக்கங்கள் அளிக்கப்படும்.
6 மாத இணையதள வகுப்புக்கு பிறகு 10 நாள்கள் சென்னையிலுள்ள முன்னாள் படைவீரர் நல இயக்ககத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்துவதுடன், நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.