திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
நான்குனேரி அருகேயுள்ள மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த மாடசாமி மகன் பூலையா (68). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான இவர், வள்ளியூர் அருகே சமூகரெங்கபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள ஒரு பத்திர எழுத்தரை பார்ப்பதற்காக பணம் மற்றும் சொத்து ஆவணங்களுடன் பேருந்தில் வந்தாராம். புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த அவர் முதலாவது நடைமேடை பகுதியில் சென்றபோது திசையன்விளையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்த பேருந்து மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்ததும் திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.