திருநெல்வேலியில் காசோலை மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வந்த முதியவர் நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் எட்வர்ட் சவரிமுத்து (62). விவசாயி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தாசன் என்பவருக்கு ரூ.41 ஆயிரம் கடன் கொடுத்தாராம். அதனை திருப்பிச் செலுத்தும் வகையில் தாசன் அளித்த காசோலை பணமின்றி திரும்பியதாம். இதுகுறித்து எட்வர்ட் சவரிமுத்து, திருநெல்வேலி மாவட்ட நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடுத்தார். தாசன் உயிரிழந்த நிலையிலும் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அதன்படி, திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்காக வந்த எட்வர்ட் சவரிமுத்து, நீதிமன்ற வளாகத்திலேயே தான் பாலிதீன் கவரில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாராம். அவரை வழக்குரைஞர்களும், காவலர்களும் தடுத்து நிறுத்தினர். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் விஜயகுமார் சம்பவ இடத்துக்குச் சென்றார். மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகரும் நீதிமன்ற வளாகத்தில் விசாரணை நடத்தினார்.
வழக்கு விசாரணை முடிந்து நிரந்தரத் தீர்வு கிடைக்காத விரக்தியில் எட்வர்ட் சவரிமுத்து தீக்குளிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.