சுரண்டை அருகே குடும்ப பிரச்னையில் தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்.
வீரகேரளம்புதூர் அருகேயுள்ள நாச்சியார்புரத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம்(70). இவரது கடைசி மகன் மாடசாமி (40). இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டினராம். இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். மாடசாமி பலத்த காயமடைந்தார். தகவலறிந்த சுரண்டை காவல் ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து மாடசாமியை கைது செய்தனர். இருப்பினும், அரிவாள் வெட்டில் காயமடைந்த மாடசாமியை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் காவலுடன் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.