காங்கிரஸ் இயக்கம் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை எனக் கூறிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலர் எஸ்.வானமாமலை, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.சுடலைக்கண்ணு ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ் பேரியக்கம் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அறிக்கை வெளியிட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
காங்கிரஸ் ஆட்சியில்தான் விவசாயிகளின் கடன் தொகை ரூ.78,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. ரூ.3,000 கோடி முதலீட்டில் பாரதிய மகிளா வங்கிகள் திறக்கப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அனைத்து வங்கி கிளைகள் மற்றும் ஏடிஎம் இயந்திரத்தில் மக்களை காத்திருக்க வைத்து பாதிப்படையச் செய்தது பாஜக அரசுதான். தமிழிசைக்கு நாட்டின் வளர்ச்சி மற்றும் வரலாறு பற்றி தெரியவில்லை என்றால், அதை முதலில் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.