பாளையங்கோட்டையில் பேருந்தில் தவறி விழுந்து காயமடைந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை மத்திய சிறை அருகே திருவனந்தபுரம் சாலையில் கடந்த 7ஆம் தேதி சாலையோரம் சென்று கொண்டிருந்த முதியவர் தவறி பேருந்தின் மீது உரசி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில் உயிரிழந்தவர் பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (80) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.