மகா சிவராத்திரியை முன்னிட்டு திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மகா சிவராத்திரியையொட்டி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் இரவு 10 மணி, 12 மணி, 2 மணி மற்றும் அதிகாலை 4 மணி என 4 காலங்களில் கும்பம் வைத்து சிறப்பு ஹோமம், சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
நெல்லையப்பர் கோயில் வெளிபிரகாரத்தில் சிவனடியார்கள் சிவலிங்கங்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
பாளையங்கோட்டையில் அருள்மிகு திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு ஹோமம், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன.
இதில், ஏராளமான பக்தர்கள் கோயிலில் அதிகாலை வரை "ஓம் நமச்சிவாயா' எனும் மந்திரத்தை எழுதி வழிபட்டனர்.
திருநெல்வேலி கைலாசபுரம் கைலாசநாதர் கோயில், சந்திப்பு சொக்கநாதர் கோயில், வண்ணார்பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில், கொக்கிரகுளம் காசி விஸ்வநாதர் கோயில், குறிச்சி சொக்கநாதர் கோயில், மேலநத்தம் அக்னீஸ்வரர் கோயில், கருப்பந்துறை அழியாபதீஸ்வரர் கோயில் உள்பட பல்வேறு சிவன் கோயில்களில் மகா சிவராத்திரியையொட்டி விடிய, விடிய நடைபெற்ற 4 கால சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர்.