சத்துணவுப் பணியாளர் பணிக்கு போலி உத்தரவு வழங்கியவர் கைது

கடையம் அருகே சத்துணவுப் பணியாளர் பணிக்கு போலி பணி நியமன ஆணை வழங்கியவரை கடையம் போலீஸார் கைது செய்தனர்.

கடையம் அருகே சத்துணவுப் பணியாளர் பணிக்கு போலி பணி நியமன ஆணை வழங்கியவரை கடையம் போலீஸார் கைது செய்தனர்.
கடையம் அருகே உள்ள மயிலப்பபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் மனைவி முத்தரசி.  இவர் கடந்த ஜன.  23ஆம் தேதி கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தியிடம், மாவட்ட ஆட்சியரிடமிருந்து  லட்சுமியூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு சத்துணவுப் பணிக்கான ஆணை வந்துள்ளதாகக் கூறி அதற்கான ஆணையை வழங்கினாராம். இது குறித்து விசாரித்த வட்டார வளர்ச்சி அலுவலர், அந்தப் பள்ளியில் தமயந்தி என்பவர் ஏற்கெனவே பணியில் இருப்பது தெரியவந்ததையடுத்து, அந்த ஆணை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவித்தார். அப்போது முத்தரசி கொண்டு வந்த ஆணை போலியானது என்பதை ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனராம்.
இதையடுத்து முத்தரசி மீது கடையம் காவல் நிலையத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கடையம் போலீஸார், முத்தரசியிடம் விசாரித்தனர். அப்போது, புளியங்குடி அருகே உள்ள புன்னைவனம் சர்ச் தெருவைச் சேர்ந்த அற்புதம் மகன் பிரான்சிஸ் சேவியர் சத்துணவுப் பணி வாங்கித் தருவதாகக் கூறியதையடுத்து அவரிடம் ரூ.3 லட்சம் கொடுத்ததாகவும், பிரான்சிஸ் சேவியர் தன்னிடம் பணி ஆணை வழங்கியதாகவும் முத்தரசி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கடையம் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ், பிரான்சிஸ் சேவியர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தார். அவரிடம் விசாரித்ததில், ஆட்சியர் பெயரில் போலியாக பணி ஆணை தயார் செய்து வழங்கியதாக ஒப்புக் கொண்டார். மேலும் அவர் பலரிடம் இது போன்று பணம் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜாகீர் ஹுசைன் தலைமையில் கடையம் காவல் ஆய்வாளர் ஆதிலட்சுமி மற்றும் போலீஸார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com