நான்குனேரி தொகுதியிலுள்ள பெரியகுளம் பாசனத்துக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
நாங்குநேரி தொகுதியில் அரியகுளம் ஊராட்சி பெரியகுளத்தின் மூலம் 1000 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இப்பாசனத்தில் தற்போது நெற்பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரியகுளத்தில் போதிய நீர் இருப்பு இல்லாததால் பயிர்கள் கருகும் அபாயம் உருவாகியுள்ளது. ஆகவே, மணிமுத்தாறு அணையில் பிரதான கால்வாயில் 3 மற்றும் 4 ஆவது ரீச் குளங்களுக்கு முழுமையாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தாமிரவருணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சுப்ரமணியனை, நான்குனேரி தொகுதி பேரவை உறுப்பினர் ஹெச். வசந்தகுமார், நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பெரியகுளம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக செயற்பொறியாளர் உறுதி அளித்தார்.