திருநெல்வேலி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மீண்டும் சிறுத்தையின் நடமாட்டம் தொடங்கியுள்ளதாகவும், கடந்த 10 நாளாக 15-க்கும் மேற்பட்ட நாய்களை சிறுத்தை கொன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுப்பன்றி, சிறுத்தை, மிளா, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக மழை பொய்த்து, வறட்சி நிலவியதால் அவை உணவு, தண்ணீர் தேடி மலையடிவாரக் கிராமங்களுக்குள் புகுவதும், கடையம், செங்கோட்டைப் பகுதிகளில் ஆடு, நாய்களைத் தூக்கிசெல்வதும் தொடர்ந்தது.
கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அதிகாலையில், மேக்கரை மேட்டுக்கால்வாய் பகுதியைச் சேர்ந்த ஹனீபா என்பவரின், மேய்ந்துகொண்டிருந்த 5 ஆடுகளை சிறுத்தை கடித்து இழுத்துச்சென்றதாக் கூறப்பட்டது. இதுகுறித்து கடையநல்லூர் வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகள் கோரிக்கையின்பேரில், வனவர் ஆரோக்கியசாமி தலைமையிலான குழுவினர், சிறுத்தையின் கால் தடத்தைக் கண்டறிந்து அதன் அருகே கூண்டு வைத்தனர். ஆனாலும், இதுவரை சிறுத்தை சிக்கவில்லை.
இந்நிலையில், சிறுத்தையின் அட்டகாசம் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், மூன்றுசெழி பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் 15-க்கும் மேற்பட்ட நாய்களை கடந்த 10 நாள்களாக சிறுத்தை கொன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், விளைநிலங்களுக்குச் செல்ல முடியாமல் விவசாயிகளும், இரவு 7 மணிக்குமேல் வீட்டிலிருந்து வெளியேவர முடியாமல் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.
தகவல் தெரிவித்தும் வனத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார் கூறும் அவர்கள், மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.