தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் COMBINED ENGINEERING SERVICES EXAMINATION தேர்வை 3, 104 பேர் சனிக்கிழமை (பிப். 24) எழுத உள்ளனர்.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் இந்தத் தேர்வு வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, பி.எஸ்.என். பொறியியல் கல்லூரி, கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி, மேரிசார்ஜென்ட் மேல்நிலைப் பள்ளி, சாப்டர் மேல்நிலைப் பள்ளி, ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேக்தலீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 கல்வி நிலையங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வினை 3, 104 பேர் எழுதுகிறார்கள். தேர்வு மையங்களில் தேர்வினை விடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும், தடைபடாத மின்சாரம், சிறப்பு பேருந்து வசதி, காவல்துறை பாதுகாப்பு வசதி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் தேர்வு எழுத ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தேர்வு எழுதும் அறைக்குள் செல்போன்களை எடுத்துச் செல்லக்கூடாது. தேர்வு எழுதுபவர்கள் தவிர இதர நபர்கள் தேர்வு நடைபெறும் வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.