தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்! விழிப்புணர்வு இல்லாததால் தொடரும் உயிரிழப்புகள்

திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதேவேளையில் புற்றுநோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், நோய்  கடைசிக் கட்டத்தை எட்டியே பிறகே, பலர் மருத்துவமனையை நாடுகிறார்கள். அதனால் அவர்களை காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச அளவில் பல்வேறு வகையான புற்று நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோய் காரணமாக  ஏராளமானோர் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் பிப். 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, புற்றுநோய் வராமல் தடுப்பது, புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானவர்களை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது ஆகியவையே புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுவதன் பிரதான நோக்கம் ஆகும். ஆனாலும், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இன்னும் பொதுமக்களை முழுமையாகச் சென்றடையவில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
இதுதொடர்பாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் சிறப்பு மருத்துவர் 
வி.ஆறுமுகம் கூறியதாவது:  திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திருநெல்வேலி மாவட்ட மக்கள் மட்டுமன்றி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் புற்று நோய்க்கு சிகிச்சை பெற வருகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில் 3,827 புதிய புற்றுநோயாளிகள் பதிவு செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மார்பக புற்றுநோய்க்காக 793 பேரும், நுரையீரல் புற்றுநோய்க்காக 360 பேரும், இரைப்பை புற்றுநோய்க்காக 251 பேரும், கருமுட்டை புற்றுநோய்க்காக 241 பேரும், பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய்க்காக 183 பேரும், உணவுக் குழாய் புற்றுநோய்க்காக 183 பேரும், ரத்த புற்றுநோய்க்காக 101 பேரும், எலும்பு புற்றுநோய்க்காக 30 பேரும், மூளை புற்றுநோய்க்காக 30 பேரும், நிணநீர் சுரப்பி புற்றுநோய்க்காக 128 பேரும், வாய்ப் புற்றுநோய்க்காக 215 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். சுமார் 34 ஆயிரம் பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். இது மட்டுமன்றி, அறுவை சிகிச்சை பிரிவு, கதிர்வீச்சு சிகிச்சை பிரிவு ஆகியவற்றிலும் புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மார்பக புற்றுநோய்: பெண்களைப் பொருத்தவரையில் மார்பக புற்றுநோயும், அதற்கடுத்தபடியாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும்தான் அதிகளவில் தாக்குகிறது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய்க்காக 793 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 500 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்கள். குறிப்பாக, மதுப்பழக்கம் உடைய பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
ஆண்களைப் பொருத்தவரை நுரையீரல் புற்றுநோய், வாய்ப் புற்றுநோயால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 21 சதவீத புற்றுநோய் புகையிலைப் பொருள்களாலேயே வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களில் 71 சதவீதத்தினர் புகையிலையை பயன்படுத்தியவர்கள்.
அறியாமை: புற்றுநோய் குறித்த அறியாமை மற்றும் அலட்சியத்தின் காரணமாக நிறைய பேர், புற்றுநோய் 3 அல்லது 4-ஆவது கட்டத்தை எட்டிய பிறகே மருத்துவமனையை நாடுகின்றனர். அதனால் அவர்களைக் காப்பாற்றுவது கடினமாகிவிடுகிறது. முதல் மற்றும் இரண்டாவது கட்ட நிலையில் புற்று நோய் இருக்குமானால், அவர்களை காப்பாற்ற முடியும்.
ஆனால், நாங்கள் சந்திக்கின்ற புற்றுநோயாளிகளில் 50 சதவீதத்தினர் கடைசிக் கட்டத்தை (4-ஆவது கட்டம்) எட்டியவர்களாக இருக்கிறார்கள்.  எனவே, மக்களுக்கு புற்றுநோய் குறித்த விஷயத்தில் போதிய விழிப்புணர்வு அவசியமாகும். வயிற்றுவலி ஏற்பட்டால்கூட, அதில் மக்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
10 சதவீத குழந்தைகள்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள் 10 சதவீதம் ஆகும். குழந்தைகளைப் பொருத்தவரையில் பெரும்பாலும் ரத்தப் புற்றுநோய் மற்றும் மூளைப் புற்று நோயாலேயே பாதிக்கப்படுகின்றனர்.
காரணங்கள் என்ன? உடல் பருமன், உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவு முறைகளை பின்பற்றுவது, தந்தூரி உள்ளிட்ட சுடப்பட்ட உணவுப் பொருள்களை சாப்பிடுவது போன்றவை புற்றுநோய்க்கு முக்கிய காரணமாகும். இதனால் இரைப்பை புற்றுநோய்க்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் சுடப்படும் உணவுப் பொருள்களில் ஹைட்ரோ கார்பன் என்ற வேதிப்பொருள் உள்ளது. அது புற்றுநோயை ஏற்படுத்தும். நாம் வசிக்கும் சுற்றுச்சூழல், கெமிக்கல் பொருள்கள் ஆகியவையும் புற்றுநோயை ஏற்படுத்தும்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில்... கடந்த டிசம்பர் வரையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 8,084 பேர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இதன்மூலம் ரூ.4.75 கோடி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருவாயாக கிடைத்துள்ளது என்றார் அவர்.


"ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம்'

ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எஸ்.எம்.கண்ணன் தெரிவித்தார்.
உலக புற்றுநோய் தினத்தின் ஒரு பகுதியாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவின் சிறப்பு மருத்துவர் வி. ஆறுமுகம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் எஸ்.எம்.கண்ணன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசியதாவது: ஆண்டுதோறும் பிப். 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. சமீபகாலமாக உலக அளவில் வளர்ந்த நாடுகளில் புற்றுநோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் முன்பிருந்த நோய்கள் இப்போது இல்லை. ஆனால் புற்றுநோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் வந்துள்ளன. அதைத் தடுக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு அடிப்படை கருத்து வைக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு புற்றுநோயை ஒழிக்க "நம்மால் முடியும், என்னால் முடியும்' என்ற கருத்து  முன்வைக்கப்பட்டுள்ளது. புகைப் பழக்கம்,  மதுப்பழக்கம் இன்றி, சுகாதாரமான உணவுகளை உட்கொண்டால் புற்றுநோயைத் தவிர்க்க முடியும்.
புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், அதை குணப்படுத்த முடியும். நோயின் தன்மைக்கேற்றவாறு முறையான சிகிச்சை பெறும்பட்சத்தில் குணமடையலாம். புற்றுநோய்க்காக ரூ.15 கோடி செலவில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் கட்டப்பட்டு வருகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது அவசியமாகும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் ரேவதி பாலன், கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவு தலைவர் சுந்தரம், கதிர்வீச்சு சிகிச்சைப் பிரிவு தலைவர் தெய்வநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மருத்துவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.  முன்னதாக, மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதை முதல்வர் எஸ்.எம்.கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com