திருநெல்வேலி அருகேயுள்ள பழையபேட்டையில் நகைப்பறித்த இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 பவுன் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பழையபேட்டை அருகேயுள்ள காந்திநகர் ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் சேதுசங்கர். இவர், தனது மனைவி வள்ளியுடன், மோட்டார் சைக்கிளில் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி, அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் வள்ளி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். இதுதொடர்பாக திருநெல்வேலி நகரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், நரசிங்கநல்லூர் இந்திரா காலனியைச் சேர்ந்த மாரிசெல்வம் (24) என்பரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இவ்வழக்கில் கொத்தன்குளம் இந்திரா காலனியைச் சேர்ந்த சியாம்பாண்டி (28), அலெக்ஸ்பாண்டியன் (26) ஆகியோரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 7 பவுன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.