பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பாளையங்கோட்டை மார்க்கெட் மற்றும் மனகாவலம்பிள்ளை மருத்துவமனை சாலையில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு இருப்பதாகவும், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனவும் மாநகராட்சிக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாராயணன்நாயர் உத்தரவின்பேரில், பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர் பாஸ்கர் முன்னிலையில், காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மார்க்கெட் உள்பகுதியில் மேஜை போட்டு பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யப்பட்ட பொருள்களையும் மாநகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். மார்க்கெட் முழுவதும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை மார்க்கெட் வெளிப்புற பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.